Stay on this page and when the timer ends, click 'Continue' to proceed.

Continue in 17 seconds

நுவரெலியா - கந்தப்பளையில் மரங்கள் முறிந்து விழும் அபாயம் : 162 பேர் இடம்பெயர்வு | Virakesari.lk

நுவரெலியா - கந்தப்பளையில் மரங்கள் முறிந்து விழும் அபாயம் : 162 பேர் இடம்பெயர்வு | Virakesari.lk

Source: Virakesari.lk

நுவரெலியா - கந்தப்பளையில் மரங்கள் முறிந்து விழும் அபாயம் : 162 பேர் இடம்பெயர்வு

நாட்டில் இடம்பெற்றுவரும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டம், கந்தப்பளை, ஹைபொரஸ்ட் மஹாவலி குடியிருப்பில் வசிக்கும் 58 குடும்பங்களை சேர்ந்த 162 பேர் கடந்த வியாழக்கிழமை (23) முதல் இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்த குடியிருப்புக்கு அருகில் ஆபத்தான மரங்கள் சரிந்து விழும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு நலன் கருதி அக்குடியிருப்பிலிருந்து வெளியேற்றப்பட்டு, 11 குடும்பங்களை சேர்ந்த 45 பேர் தற்காலிகமாக தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் போதிய இடவசதி இன்மையால் ஏனைய 47 குடும்பங்களை சேர்ந்த 117 பேர் உறவினர் மற்றும் அயலவர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அண்மையில் அப்பகுதியில் மூன்று வீடுகளில் மரங்கள் முறிந்து விழுந்து ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

நாட்டில் நிலவும் பலத்த மழை மற்றும் கடும் காற்றுடன் கூடிய மோசமான காலநிலை காரணமாக எங்களது வீடுகளுக்கு அருகிலுள்ள மரங்களும் அதன் கிளைகளும் முறிந்து விழும் நிலையில் அருகிலுள்ள வீடுகள், மனித உயிர்கள், உடைமைகளுக்கு பாதிப்பினை விளைவிக்கும் அபாய நிலை காணப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் உறங்க முடியாமல், அனைவரும் ஒன்றிணைந்து வீதியில் நிற்பதே எங்களின் தொடர்கதையாக உள்ளது. இப்பகுதியிலுள்ள பாரிய மரங்கள் எந்த நேரத்திலும் விழும் அபாயம் காணப்படுகிறது என்று அப்பிரதேசவாசிகளும் வீதிப் போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகளும் தெரிவிக்கின்றனர்.

1987ஆம் ஆண்டு குடியேற்றப்பட்ட காலத்திலிருந்து, அங்கே பலத்த காற்றினால் பெரிய மரங்கள் அருகிலுள்ள வீடுகளின் மீது விழும் அபாயம் உள்ளதாக உரிய அதிகாரிகளுக்கு அறிவித்து எவ்வித பயனும் இல்லை எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஜனவரி மாதம் இது தொடர்பாக வலப்பனை பிரதேச செயலாளரிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து, பிரதேச செயலாளர் ஆபத்தான மரங்களை அகற்றுமாறு வனவள திணைக்களத்தின் நுவரெலியா மாவட்ட வன அதிகாரிக்கு அறிவித்துள்ளார்.

ஆனால், பலத்த காற்றுடன் கூடிய மழைக்காலம் வரை அந்த மரங்களை அகற்ற மாவட்ட வன அலுவலர் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே, இனிவரும் காலங்களில் மழையுடன் கூடிய பலத்த காற்று வீசினால் ஆபத்தினை ஏற்படுத்தும் வகையில் உள்ள மரங்களை பாரிய அனர்த்தங்கள் ஏற்படுவதற்கு முன்பே அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.